Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட 8 பேர் நாய்கன்காடு பகுதியில் உள்ள சவேரி என்ற தனியார் வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு நிதி நிறுவனத்திற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த 4 பேர் நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகத்தை சரமாரியாக வெட்டினர்.
தடுக்க முயன்ற சண்முகத்தின் கை துண்டான நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியில் ஓடினார். அப்போது படியிலிருந்து கீழே தள்ளிவிட்ட கும்பல், சண்முகத்தை உயிர் போகும் வரை கொலை வெறியுடன் தாக்கியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர் கொலையாளிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்த கோபிச்செட்டிப்பாளையம் போலீஸார், சண்முகத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.